திண்டிவனம் அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையேற்று நடத்தி வைத்த திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகனுடன் இணைந்து செய்து, அந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்ற அதிமுக நிர்வாகி முரளியை, கட்சியிலிருந்து தூக்கியடித்தது அதிமுக தலைமை. இந்த நிலையில், தான் வகித்து வந்த விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார் முரளி. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் அதிமுக கட்சியில் 1984-ல் கிளைச் செயலாளராக இருந்தேன். அதன்பின்னர் படிப்படியாக ஒன்றிய செயலாளர், ஒன்றிய பேரவை செயலாளர், மாவட்ட பேரவை இணை செயலாளர் அதன்பின், மாவட்ட பேரவை செயலாளராகி தொடர்ந்து கட்சி பணியாற்றி வந்தேன்.

அண்ணாமலையுடன் முரளி குடும்பத்தினர்

கடந்த உள்ளாட்சி தேர்தலில் வானூர் ஒன்றியத்தில் 11 அதிமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற பாடுபட்டேன். அது அனைவருக்கும் தெரியும். என் மகன் நடத்திய 39 ஜோடிகளின் திருமணத்துக்கு நான் தந்தை என்ற முறையிலும், அறக்கட்டளையின் சார்பிலும் தான் சென்றேன். அண்ணாமலை அவர்கள் 39 ஜோடிகளை வாழ்த்தும் போது, எந்த இடத்திலும் பாஜக கொடியை நாங்கள் கட்டவில்லை. அந்த பத்திரிகையில் கூட என்னுடைய பெயர் இடம் பெறவில்லை. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக என்னை கட்சியிலிருந்து நீக்குகிறார்கள். இதற்கு எங்களுடைய பதிலை தருவோம்.

நான் அண்ணாமலை அவர்களை புகழ்ந்து பேசவில்லை. ‘அண்ணாமலை என்றால் இன்று தமிழ்நாட்டில் எல்லோருக்கும் புளி கரைக்கிறது’ என்றுதான் சொன்னேன். இவர்களுக்கு ஏன் இந்த பயம் வந்தது என்று தெரியவில்லை. அதனால்தான் என்னை நீக்கியிருக்கிறார்கள். இந்த திருமண நிகழ்ச்சிக்கு 10 நாள்களுக்கு முன்பாகவே, இந்த நிகழ்ச்சிக்கான பத்திரிகையை சி.வி.சண்முகம் அவர்களிடம் என்னுடைய மகன்கள் இருவரும் கொடுத்தார்கள். அவரும் ‘நன்றாக நடத்துங்கள்’ என்றுதான் சொன்னார். அதிமுக-வில் 35 வருடமாக இருக்கிறேன். நான் வகித்து வந்த மாவட்ட பேரவை செயலாளர் பதவி அம்மா கொடுத்தார்கள். இந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பதவியும் அம்மா கொடுத்ததுதான்.

முரளி

அம்மா கொடுத்த ஒரு பதவியிலிருந்து என்னை நீக்கும்போது, மற்றொரு பதவியிலும் இருக்க விருப்பமில்லை. அதனால் தான் இன்று மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். கண்டிப்பாக திமுகவில் சேரும் எண்ணம் எனக்கில்லை. என்னுடைய அடுத்த கட்ட அரசியல் நகர்வு கடவுளுக்குதான் தெரியும். என்னுடைய நிலையில்தான் அதிமுக மாவட்ட செயலாளர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் சிலர் என்னிடம் பேசினார்கள். `உங்களுக்கே இந்த முடிவு என்றால், எங்களுக்கு என்ன கதி’ என்றார்கள். `இன்று ஜெயலலிதா அவர்களே எழுந்து வந்து தன்னுடைய பொதுச்செயலாளர் பதவியை கேட்டாலும், எடப்பாடி அவர்கள்… ‘உங்களை நாங்கள் பொறுப்பிலிருந்து எடுத்துவிட்டோம், போங்கள்’ எனச் சொல்லுவார்’ என்றார்கள்.

சி.வி.சண்முகம் – எடப்பாடி பழனிச்சாமி

என்னுடைய மகன் திருமணத்திற்கும், பள்ளியின் நிகழ்சிக்கும் தமிழிசை வந்தார். எங்களுடைய வீட்டிற்கு அண்ணாமலை வந்தார். அப்போதெல்லாம் என்னை கட்சியிலிருந்து நீக்கவில்லை. என்னுடைய பையன் கல்யாணத்திற்கு, எடப்பாடி அவர்களுக்கு பத்திரிகை கொடுத்து கூப்பிட்டோம். `உங்கள் மாவட்ட செயலாளரை மீறி நான் வர முடியாது’ என்று சொல்லிவிட்டார். என்னிடம் விளக்கம் கேட்காமல் கட்சியிலிருந்து நீக்கி விட்டார்கள், கண்டிப்பாக அவர்களிடம் முறையிட மாட்டேன்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/iXJZSHo