அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து, தங்களின் கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A) என பெயர் சூட்டியிருக்கின்றன. தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டணிக் கூட்டத்துக்காக பாட்னாவுக்குச் சென்றபோது, தமிழ்நாட்டின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, அவர்மீது நடவடிக்கை எடுத்தது.

அதேபோல முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டத்துக்காக பெங்களூருக்குச் சென்றபோது, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது பெங்களூர் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பாட்னாவில் முதல் கூட்டம் நடைபெற்றபோது தி.மு.க-வைக் குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. பெங்களூருவில் 2-வது கூட்டம் நடைபெறும்போதும், தி.மு.க-வைக் குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது” எனத் தெரிவித்தார்.
மேலும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ போன்ற அமைப்புகளை எதிர்க்கட்சிகள்மீது ஏவிவிடுவதாகக் குற்றம்சாட்டின. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் இத்தகைய சோதனை நடவடிக்கை குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அதில், தி.மு.க அமைச்சர்களிடம் அடுத்தடுத்து அமலாக்கதுறை சோதனை நடத்துவது… ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி’… ‘கடமையைச் செய்கிறது அமலாக்கத்துறை’… ‘கருத்து இல்லை‘ என மூன்று விருப்பத்தேர்வுகள் கொடுக்கப்பட்டன. இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவில் அதிகபட்சமாக 55 சதவிகித வாசகர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றும், 40 சதவிகித வாசகர்கள் கடமையைச் செய்கிறது அமலாக்கத்துறை என்றும், 5 சதவிகித வாசகர்கள் கருத்து இல்லை என்றும் வாக்களித்திருக்கிறார்கள்.
from Tamilnadu News https://ift.tt/4NmrXMy
