சென்னை தீவுத்திடலைச் சுற்றி டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக ‘ஃபார்முலா 4’ கார் பந்தயப் போட்டி நடத்தப்படவிருந்தது. இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச அளவிலான பந்தய தடம் இருக்கும் நிலையில், சென்னை மாநகரில் எந்த பகுதியிலும் இந்த கார் பந்தயத்தை நடத்தக் கூடாது என தடை விதிக்கக் கோரி, மருத்துவர் ஸ்ரீஹரிஷ், லூயிஸ் ராஜ், டி.என்.பி.எஸ்.சி முன்னாள் உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.

பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் பந்தயம் நடக்கவிருப்பதாகவும், 250 கிலோமீட்டர் வேகத்தில் கார்கள் செல்லும்போது, 130 டெசிபல் ஒலி மாசு ஏற்படும் என்பதால், சிகிச்சை பெறுபவர்களைப் பாதிக்கும் எனவும் மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டது. ராணுவம், துறைமுகம், கடற்படை ஆகியவற்றின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. சென்னை பெருநகர வளரர்ச்சி குழும நிதியை கார் பந்தயத்துக்குப் பயன்படுத்தவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

F4 RACE

இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 1-ம் தேதி விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “பந்தயத்தை நடத்தும் தனியார் நிறுவனத்துக்காக தடுப்பு சுவர்கள் அகற்றப்பட்டு, நல்ல சாலைகளை மறு சீரமைப்பதற்கு பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. உலகில் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் வீதி கார் பந்தயங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடந்திருக்கும்போதும், இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச தரத்திலான பந்தயத்தடம் உள்ள நிலையிலும் நகரின் மத்தியில் நடத்தப்படுகிறது.

விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆர்வத்தில் தொடங்கிய எண்ணத்துக்கு, முதல்வர் அனுமதி அளித்திருக்கிறார். கோடிக்கணக்கில் அரசு நிதி ஒதுக்கியிருக்கும் நிலையில், பந்தயத்தின்மூலம் வரும் வருமானம் அனைத்தும், தனியார் நிறுவனத்துக்குச் செல்கிறது. பந்தயத்தை நடத்தும் தனியார் அமைப்பு குறைந்த அளவே முதலீடு செய்திருக்கும் நிலையில், பந்தயத்தில் அசம்பாவிதம் நடந்தால், மருத்துவச் செலவுகளை யார் ஏற்பது?” என வாதிட்டனர்.

தொடர்ந்து நீதிபதிகள், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பந்தயத்தை நடத்தாதபோது, தனியார் அமைப்பு நடத்தும் பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது… பந்தயம் நடத்துவதால் அரசு ஈட்டும் வருமானம் குறித்த விவரங்கள் உள்ளனவா, ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறதா?” எனக் கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில், “ஐ.பி.எல் போட்டி நடத்தப்படும் நடைமுறையில்தான் இந்த கார் பந்தயமும் நடத்தப்படுகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன” என்று விளக்கம் அளிக்கப்பட்டது. கார் பந்தயத்தை நடத்தும் நிறுவனம் தரப்பில், “ஏற்கெனவே ஹைதராபாத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் போட்டியை நடத்தியிருக்கிறோம். பந்தய வீரர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கும் சேர்த்து பொது காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. தடுப்பாண்கள், கட்டமைப்பு, காப்பீடு என  200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது” என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசுக்கும், பந்தய ஏற்பாட்டாளர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு (டிசம்பர் 4) ஒத்திவைத்தனர். இதற்கிடையில். மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக, திங்கள்கிழமை நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

F4 RACE – நீதிமன்றம்

தமிழக அரசு சார்பில், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் ஆஜராகி, வரும் 9,10 தேதிகளில் நடத்த திட்டமிட்டிருந்த கார் பந்தயம், மிக்ஜாம் புயல், மழை, வெள்ள பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகவும், அதை வரும் 15, 16 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
பந்தயத்தை நடத்துவதற்கான பணிகள் 80 சதவிகிதம் முடிந்துவிட்டதாகவும், டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பந்தயம் நடத்தும் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அவர் தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு (டிசம்பர் 11) நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

from Tamilnadu News https://ift.tt/kKsntdS