மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் கிட்டத்தட்ட ஒருவாரமாக சென்னை மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, அரசின் நிவாரண உதவிகள் இன்னும் வந்து சேரவில்லை என சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அரசைக் குறை கூறி வருகின்றனர். எதிர்க்கட்சிகளும், ஆளும் தி.மு.க அரசை சாடிவருகின்றன. குறிப்பாக, ரூ.4,000 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் பணி திட்டம் தொடர்பாக தி.மு.க வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

அதைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, “மழைநீர் வடிகால் பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.5,166 கோடி. இதுவரை ரூ. 2,191 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே நிறைவடைந்திருக்கின்றன. மீதமுள்ள ரூ.3,000 கோடிக்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும்” என வடிகால் பணி திட்டம் குறித்து விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் மெத்தனமாக இருந்ததால் மக்களுக்கு இவ்வளவு பாதிப்பு என்றும், புயல் எச்சரிக்கை வந்தபோது கே.என்.நேரு சேலத்தில் தி.மு.க இளைஞரணி மாநாட்டுக்கான வேலையில் இருந்ததாகவும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறார்.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்குத் தேவையான உணவு, பால், தண்ணீர் போன்றவை பெரும்பாலான இடங்களில் கிடைக்கவில்லை. சென்னை மாநகரம் முழுவதும் தண்ணீரில் தத்தளிக்கிறது. புயல் வரும் சமயத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தபோதும், நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் அதைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாக, மெத்தனமாக இருந்த காரணத்தால் எல்லா சாலைகளிலும் தண்ணீர் தேங்கி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இந்த விடியா தி.மு.க அரசு முறையாக அதிகாரிகளை நியமிக்காததாலும், தக்க ஆலோசனை வழங்காததாலும், அதிகாரிகள் முழுமையான செயல்பாட்டில் ஈடுபட முடியாமல் வெள்ள பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது. மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடும்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், தி.மு.க இளைஞரணி மாநாடு வேலை தொடர்பாக பெரும்பாலான நேரம் சேலத்தில்தான் இருந்தார். அங்கிருந்த நேரத்தில் சென்னையில் இருந்திருந்தால் பாதிப்பிலிருந்து மக்களைப் பெருமளவு மீட்டிருக்கலாம்.

வடிநீர் கால்வாய்ப் பணிகள் திட்டம் 90 சதவிகிதம் முடிந்துவிட்டதாக முதலமைச்சரும், அமைச்சர்களும் கூறிவந்தனர். ஆனால், நேற்றைய தினம் 51 சதவிகித பணிகள்தான் முடிவடைந்திருப்பதாகக் கூறுகிறார்கள். 90 சதவிகித பணிகள் முடிந்து விட்டதாக முதலமைச்சரும், அமைச்சர்களும் கூறியதால் தான் மக்கள் ஏனோதானோ என்று இருந்துவிட்டார்கள். அதனால்தான் இவ்வளவு பாதிப்பும். தி.மு.க அரசு தான் இதற்கு முழு பொறுப்பு. அவர்கள்தான் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இனியாவது இந்த விடியா தி.மு.க அரசும், பொய் பேசும் அமைச்சர்களும் கனமழைக்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மக்களுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கி மக்களைக் காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/QiVgFCM
