திருச்சி மாவட்டம், சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற மாநாட்டை நடத்துகிறது. தொல்.திருமாவளவனின் மணிவிழா, கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளி விழா, ‘இந்தியா கூட்டணி’யின் வெற்றிக் கால்கோல் விழா என்று முப்பெரும் விழாவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த மாநாட்டை நடத்துகிறது. இன்று மாலை ஐந்து மணியளவில் மாநாடு நடைபெறும் இடத்துக்கு வருகை தந்த தொல்.திருமாவளவன், மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த 300 அடி உயரக் கொடிகம்பத்தில் கொடி ஏற்றினார். அதன் பிறகு, அவர் மாநாட்டு மேடைக்குச் சென்றார்.

தொடர்ந்து, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி சென்னை அம்பேத்கர் திடலிலிருந்து கட்சியினர் ஏந்தி வந்த சமத்துவ சுடரையும், மதுரை மேலவளவிலிருந்து ஏந்தி வந்த சுதந்திர சுடரையும், கீழ்வெண்மணியிலிருந்து கொண்டு வந்த சகோதரத்துவச் சுடரையும் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு, கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மேடையை அலங்கரிப்பதற்கு முன்பாக, 33 தீர்மானங்களை முன்மொழிந்தார்.

தொல்.திருமாவளவன்

அதில், பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் மத்திய அரசை ஆதரவு வழங்க வலியுறுத்துவது, முழுதாகக் கட்டி முடிக்கப்படாத ராமர் கோயிலைத் திறந்து அரசியல் ஆதாயம் தேடும் பா.ஜ.க அரசின் நடவடிக்கையை கண்டிப்பது, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசை வலியுறுத்துவது,

இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னையை அறிவிக்க மத்திய அரசை வேண்டுவது, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திட உத்தரவிட வலியுறுத்துவது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை வேண்டுவது, நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவது, வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டுவது, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையைத் திரும்பப் பெற வேண்டும், ஆளுநர் பதவியை ஒழிப்பது, ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சட்டம் இயற்ற வலியுறுத்துவது உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

from Tamilnadu News https://ift.tt/cFlf0re