`திருமண உறவு புனிதமானது; அது பாதுகாக்கப்பட வேண்டும். திருமணம் மீறிய உறவை குற்றமாக்கவேண்டும்’ என்று மத்திய அரசுக்கு நாடாளுமன்ற எம்.பிக்கள் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா இந்தியில் பெயர்மாற்றம் செய்யப்பட்டு திருத்தியமைக்கப்பட்ட மூன்று புதிய மசோதாக்களை தாக்கல் செய்தார். குறிப்பாக, இந்திய குற்றவியல் சட்டம் (Indian Penal Code) IPC-க்கு மாற்றாக “பாரதிய நியாய சன்ஹிதா- 2023” (Bharatiya Nyaya Sanhita Bill, 2023), என்ற சட்டத்தையும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (Criminal Procedure Code) CrPC-க்கு மாற்றாக “பாரதிய நாகரீக் சுரக் ஷா-2023″ (Bharatiya Nagarik Suraksha Sanhita Bill, 2023) என்ற சட்டத்தையும், இந்திய சாட்சிகள் சட்டம் (Indian Evidence Act) IEA-க்கு மாற்றாக “பாரதிய சாக் ஷியா-2023″(Bhartiya Sakshya Bill, 2023) ஆகிய மூன்று புதிய மசோதாக்களை கொண்டுவந்தார்.

அப்போதே இதை நாடாளுமன்ற நிலைக்குழுவின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், `இவை அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. இந்தி மொழி பேசாத மக்களை அவமதிக்கும் செயல்!’ எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சி எம்பிக்களான அதீர் ரஞ்சன் செளத்ரி, ப.சிதம்பரம், திக்விஜய் சிங், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ’ப்ரியன், தி.மு.க எம்.பிகளான தயாநிதி மாறன், என்.ஆர். இளங்கோ உள்ளிட்டோர் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தனர். இருப்பினும் இவர்களின் எதிர்ப்பையும் மீறி சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில், புதிய மசோதாக்கள் தொடர்பாக ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது. அதில், “திருமணம் மீறிய உறவை குற்றமாக்க வகை செய்யும் சட்டப்பிரிவை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும். ஏனென்றால் திருமண உறவு என்பது புனிதமானது. அது பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. அதுமட்டுமல்லாமல் திருமணம் மீறிய உறவு குற்றமாக்கப்படும்போது, ஆண் மற்றும் பெண் என்ற பேதமின்றி இருவருக்கும் அந்த சட்டம் நடுநிலையாக இருந்து தண்டனை வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும், குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட வேண்டும்!” என நாடாளுமன்ற எம்.பிக்கள் குழு பரிந்துரைத்திருக்கிறது.

2018-ம் ஆண்டின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது?
ஏற்கெனவே, இந்தியாவைப் பொறுத்தவரையில் திருமணம் மீறிய உறவு என்பது குற்றமாகக் கருதப்பட்டு வந்தது. குறிப்பாக, இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 497-ன்படி அதிகபட்சமாக ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை, அபராதம் என விதிக்கப்பட்டு வந்தது. அந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த ஜோசப் ஷைன் என்பவர் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் புதிய தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர்.

அதாவது 2018-ல் இந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, “திருமணம் மீறிய உறவு குற்றம் கிடையாது” என தீர்ப்பளித்தது. குறிப்பாக அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “திருமணத்தை மீறிய உறவு சிவில் குற்றமாக இருக்கலாம். ஆனால் அது கிரிமினல் குற்றமாக இருக்க முடியாது. பெண்களின் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமையில் 497-வது சட்டப்பிரிவு தலையிடுகிறது. கணவர் என்பவர் பெண்களின் எஜமானர் கிடையாது. எனவே இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497 ரத்து செய்யப்படுகிறது” என்றார். அதைத்தொடர்ந்து, “திருமணம் மீறிய உறவு குற்றம் அல்ல!” என்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. இந்த நிலையில், `திருமணம் மீறிய உறவை குற்றமாக்கவேண்டும்’ என்று மத்திய அரசுக்கு நாடாளுமன்ற எம்.பிக்கள் குழு பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/ksE27cz
